ஆறதான வித்துலே அமர்ந்து ஒடுங்குமாறு போல்,
சூலதான உட் பலன் சொல்வதான மந்திரம்,
மேலதான ஞானிகாள் விரித்துரைக்க வேணுமே!.
இந்த உலகில் உள்ள உயிரினங்களை நான்கு விதமான யோனி பேதங்களாக பிரிக்கலாம்.
1. உப்புசத்தில் (வெப்பத்தில்) பிறக்கும் உயிரினங்கள் புழு, பூச்சிகள் .
2. விதையில் பிறக்கும் உயிரினங்கள் மரம், செடி, கொடிகள்.
3. முட்டையில் பிறக்கும் உயிரினங்கள். பாம்பு, பல்லி, பறவை இனங்கள்.
4. குட்டி போட்டு பிறக்கும் உயிரினங்கள்.
இப்படி நான்கு வகையான யோனி பேதங்களில் நான்காவதான குட்டி போட்டு பிறக்கும் உயிரினங்களில் மனிதன் பிறக்கிறான். அந்த நாலதான யோனியில் , அதாவது பெண்களின கருவறையில் நவின்று நின்று ஒன்றதாய் என்றால் அங்கே கருமுட்டையாக உருவாகி மலர்ந்து காத்திருப்பது ஒன்றதாகி இருக்கும் நாதம். (அதிர்வு).
ஆறதான வித்தின் உள்ளே அதாவது ஆண்களின் விதைப் பையில் விதையாக இருக்கும் அ எனும் உயிர் ஒளியாக அந்த உயிரைப் பற்றிய அத்தனை தகவல்கள் அடங்கிய பெட்டகமாக அமர்ந்து ஒடுங்குமாறு போல்,
சூலதான உட்பலன் சொல்வதான மந்திரம் ஓம் எனும் அ உம் உ என்றால் உருவம் உடல் சூல் கொண்டு கருவாகி உருவாகி, உடலாக பிறக்கிறது.
இந்த உயிர் உடலாக பிறக்கும் தத்துவத்தை மேல் நிலையில் இருக்கும் ஞானிகள் விரித்து உரைக்க வேணுமே! என்கிறார்.
229. அருவாமாய் இருந்த போது, உன்னை அன்று அறிந்திலேன்.
உருவமாய் இருந்த போது உன்னை நான் அறிந்தனன்.
உருவினால் தெளிந்து கொண்டு கோதிலாத ஞானமாம்,
பருவமான போதலோ பரப்பிரம்மம் ஆனதே!.
நான் அருவமாக இருந்த போது என்றால் இந்த உடல் இல்லாமல் உயிராக இந்த உலகில் ஒளியாக நாதமாக அருவமாக இருந்த போது உன்னை என்னால் அறிந்து கொள்ள முடியவில்லை. அப்பா அம்மாவுக்கு மகனாக உருவாக உடலாக உருவமாய் இருந்த போதுதான் உன்னை என்னால் முழமையாக உணர முடிந்தது. இந்த உருவத்தால் இந்த உலகினை , இறைவனை ஐந்து வகையான ஞானேந்திரியங்கள் வழியாக அறிந்த அறிவுதான் (ஞானம் தான்) நான் பருவம் அடைந்து நான் அடுத்த உயிரைப் படைக்க பருவம் அடைந்த போதுதான் பரப்பிரம்மம் அதாவது அந்த அறிவு எனும் ஒளிதான் விதையாக விதைப் பைக்குள் பரப் பிரம்மமாக ஆனது என்கிறார்.